சனி, 24 மார்ச், 2018

சிவாஜி

*தென்னிந்தியாவில் காலூன்ற ரூ.4,800 கோடியில் பாஜகவின் ஆபரேஷன் திராவிடம்-தெலுங்கு நடிகர் சிவாஜி பகீர்*

விஜயவாடா : 2019 மக்களவைத் தேர்தலில் தென்இந்தியாவை வளைக்க ரூ. 4,800 கோடியில் ஆபரேஷன் திராவிடம் என்ற திட்டத்தை தேசிய கட்சி ஒன்று திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி, தமிழில் 'காதல் சுகமானது' என்ற படத்திலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்துள்ளார், சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது நடந்த போராட்டங்களில், மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என குரல் கொடுத்தார்.
பாஜகவில் சேர்ந்து, மாநிலத்தை பிரித்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்தார். சில மாதங்கள் வரை எந்த கட்சியிலும் இல்லாமல் சமூக பிரச்சினைகளை மட்டும் சமூகவலைதளங்களில் சுட்டிக் காட்டி வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த 20 நிமிட வீடியோவில் சிவாஜி தேசிய கட்சிகள் எப்படி மாநிலக் கட்சிகளின் உதவியுடன் தென் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற குறி வைக்கிறது என்பதை விவரித்துள்ளார்.

*பாஜகவின் ஆபரேஷன் திராவிடம்*

ஓராண்டுக்கு முன்னர் தேசிய கட்சியை சேர்ந்த கல்யாண்ஜியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் இந்த ஆபரேஷன் திராவிடம் பற்றி கேட்டேன். இதன் முக்கிய நோக்கமே 2019ல் தென் இந்தியா முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்று கூறினார்.

*தமிழகத்திற்கு ஆபரேஷன் ராவணா*

தென் மாநிலங்களை வகை பிரித்து இதற்கு பெயரிட்டுள்ளனர். அதாவது ஆந்திரா, தெலுங்கானாவிற்கு 'ஆபரேஷன் கருடா', கேரளா, தமிழ்நாட்டிற்கு 'ஆபரேஷன் ராவணா', கர்நாடகாவிற்கு 'ஆபரேஷன் குமாரா' என பெயர்வைத்துள்ளது பாஜக என்றும் சிவாஜி கூறியுள்ளார்

*பாஜகவின் ரகசிய உளவாளிகள்*

இந்த அரசியல் ஆபரேஷன்களை நடத்த ‘ஸ்லீப்பர் செல்ஸ்' எனப்படும் ரகசிய நபர்கள் மூலம் பாஜக, 4 மாநிலங்களில் அரசியல் சித்து விளையாட்டுகள் தொடங்கியதன் மூலம் கட்சிகளில் உட்பூசல் ஏற்படும். பலர் தாய் கட்சிகளில் இருந்து வெளியேறுவார்கள். பலர் புதிய கட்சிகளை தொடங்குவார்கள். மக்களைக் குழப்பும் பல தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவார்கள். இதற்கென தனி அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரூ. 4,800 கோடியை ஒதுக்கி செலவிட்டு வருகிறது.

*ஆந்திராவில் விரைவில் கலவரத் தீ*

பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சிலர் மயங்கிப் போவார்கள். குறிப்பாக ஆந்திராவில் பெரும் கலவரம் நடக்க உள்ளது. ஒடிசா மற்றும் பீஹார் மாநிலங்களில் இருந்து கூலிப்படை வரவழைக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அரங்கேற்றிய பின்னர், ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தற்போதைய ஆந்திர ஆட்சியை கலைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*கட்டம் கட்டப்படும் சந்திரபாபு நாயுடு*

முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் பதிவாகும். ஒரு கட்டத்தில் சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவிடப்படும். இதன் மூலம் தெலுங்கு தேச கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கி சந்திரபாபு நாயுடுவை பொருளாதாரரீதியாகவும் நிலை குலைய செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

*விழித்துக்கொள்ளுங்கள் மக்களே*

கடந்த 6 மாதங்களாக நான் டெல்லியில் தங்கி இருந்தபோது ஸ்லீப்பர் செல்லில் உள்ளவர்களில் ஒருவர் இந்த தகவல்களை எனக்கு தெரிவித்தார். எனக்கு தெரிந்து அரசியல் பூதாகர விஷயங்களை ஆந்திர மக்களிடம் தெரிவிக்காவிட்டால் அவர்கள் என்னை மன்னிக்கமாட்டார்கள். ஆந்திரா மட்டுமின்றி, தென் மாநிலங்களில் நம்பக்கூட முடியாத பல செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்ற அந்த கீழ்த்தரமான செயல்களில் கூட ஈடுபடவும் பாஜக தயங்காது. பொதுமக்கள் அந்த தேசிய கட்சியின் சதியில் விழாமல் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் சிவாஜி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக