வெள்ளி, 21 அக்டோபர், 2016

விதைப்பந்து

🎋🍃🍂🍁🌾☘🌾🍁🍂🍃🎋விதைப்பந்து என்பது...மண் மற்றும்  பசுஞ்சாணத்தால் ஆன உருண்டை. இதனுள் பயன்தரும் மரங்களின் விதைகளை பொதிந்து உருவாக்கிய பந்து... விதைகளை சேகரித்து ,அதை பாதுகாத்து அதனை இயற்கை எறிகுண்டுகளாக பரவலாக்கிய மிகவும் தொன்மையான எகிப்திய  நாட்டு விவசாய முறையாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜப்பான் நாட்டில் விளைநிலங்களைத்தவிர்த்து எரிமலை சாம்பல் படிந்தபகுதியில் விதைப்பந்துகளை வானிலிருந்து தூவியே காடுகளை  உருவாக்கினர்.

விதை பந்துகளை தயாரிக்க தேவையான
பொருட்கள் :

1. செம்மண் அல்லது களிமண்
2. தரமான பலன்தரும் விருட்சங்களின் விதைகள். 3. பசுஞ்சாணம்
4. நீர்

செய்முறை :

செம்மண்ணில் பாதியளவு சாணத்தை கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள். முதலில் நிழலில் உலர்த்தி பிறகு வெயிலில் ஒரு நாள் காயவைக்கவும்.இதனால் உருண்டைகளில் வெடிப்பு வராது. சூரிய வெப்பத்தில் ஒரு நாள் காய்ந்தால் அது இறுகி விடும். 

நீங்கள் வெளியே செல்லும் போது மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி செல்லுங்கள். அவ்விதை மழை வரும்வரை எலி, எறும்பு, பறவைகளிடமிருந்து பாதுகாப்பாய் இருக்கும். ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.
விதைகளைப் பொருத்தவரை சில நாட்களுக்கு முளைக்க  தேவையான சத்துக்கள் விதையிலேயே இருக்கும்.

மண்ணில் கலந்துள்ள சாணமானது, மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் இலகுவாக்கி விடும். மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின்கழிவை செடியின் வேர் உண்டு... தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.

ஆனால் வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படலாம். வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். நிலமானது செடி வளர்வதற்கான ஏற்றதாக இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதை முளைக்காது. ஆனால் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இலகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை  இலகுவாக்கி விடும்.

எனவே உங்கள் வீடுகளில் சிறிது செம்மண் மன்றும் சாணத்தை சேகரித்து வையுங்கள். பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள். ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும்போது தோதான இடம் பார்த்து வீசி விடுங்கள்.
விளைநிலங்களை தவிர்க்கவும்.
கோடை காலமானாலும் வீசி விடுங்கள். பறவைகள் கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக விதைகளை  எச்சமாக விதைத்துச் செல்கிறது.
சாலைதோறும் மரங்களை நட்டு வைக்க அசோகராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

இயற்கையை நேசிக்கும் மனமும்,ஆர்வமும் அதற்கான மெனக்கிடல் இருந்தால் போதும், விதைப்பந்துகள் தயாரித்து விடலாம். வரும் ஐப்பசி அடைமழையை விதைபந்துகளுடன் வரவேற்போம். நன்றி நட்புக்களே!!
🍂🍁🍂🍁🍂🍁🍂🍁🍂🍁🍂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக